Thursday, December 15, 2016

இனிப்பு: ஒரு மருத்துவ அறிக்கையைத் தேடுகிறேன்

இந்தப் பதிவினைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம். இனிப்பு எனும் எனது
ஆவணப்படத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒரு அலோபதி மருத்துவ அறிக்கையைத் தேடிக் கொண்டுள்ளேன். அவ்வாறான அறிக்கை இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
ஒருவேளை, உங்களால் அவ்வறிக்கையைக் கண்டறிய முடிந்தால், எனக்கு அனுப்பி வையுங்கள்.

அந்த அறிக்கை எதுவென்றால்,

”ஒரு மனிதருக்குச் சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால் அவர்
மரணமடைந்தார்’’ எனும் அறிக்கை.

சர்க்கரை ஓர் ஆட்கொல்லி நோய் என எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்
செய்யப்படுகின்றன. ஆனால், அது கொலை செய்த மனிதரை என்னால் காண இயலவில்லை.
இந்த அறிக்கைக்கென சில நிபந்தனைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

1. அந்த மனிதருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என உறுதிப்படுத்தும் முதல்
இரத்தப் பரிசோதனை அறிக்கை இணைக்கப்பட வேண்டும்.

2. அந்த மனிதர் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் இருந்திருக்க
வேண்டும். இது அவரது உறவினர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

3. அந்த மனிதர் இறந்த பின்னர், அவரது மரணம் சர்க்கரை நோயினால் மட்டுமே
ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள் இணைக்கப்பட
வேண்டும்.

சர்க்கரை ஓர் ஆட்கொல்லி நோய். மருந்துகள் உட்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அந்த நோய் தீவிரமடைந்து உயிரைப் பறிக்கும்’ என்ற அலோபதியின் கருத்தினைஅதே அலோபதியின் அறிக்கைகள் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் மேற்கண்ட நிபந்தனைகளின் வழியாக நான் முன்வைக்க விரும்பும் கருத்து.

இந்த அறிக்கையை நான் தேடும்போதெல்லாம், வேறு ஒரு வகை மருத்துவ அறிக்கை எங்கு பார்த்தாலும் தென்படுகிறது. ‘அந்த மனிதருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அவர் அலோபதி மருந்துகள் உட்கொண்டார். பின்னர் அந்த மனிதர் இறந்துவிட்டார்’ என்னும் அறிக்கைதான் அது.

இறந்தவரைக் கொலை செய்தது சர்க்கரை நோயா அல்லது அவர் உட்கொண்ட மருந்துகளா என்ற கேள்விக்கு ‘அறிவியல்பூர்வமான’ விடையைக் காண வேண்டும் அல்லவா.

700 கோடி மனிதர்கள் வாழும் இந்தப் புவியில் எனது தேடலுக்கு உட்பட்ட அந்த
ஒரே ஒரு மருத்துவ அறிக்கை கிடைக்காமல் போவது வேதனை தருவதாக உள்ளது.
அதைக்காட்டிலும் வேதனையானது என்னவெனில், இப்படி ஓர் அறிக்கையைப் பார்க்காமலேயே சர்க்கரை நோய் வந்தால் மரணமே கதி
என மக்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான். ஆகவே, ’அறிவியல் பூர்வமான
ஆதாரத்தை’ எனது ஆவணப் படத்திலும், நூல்களிலும் முன் வைக்க
விரும்புகிறேன்.

அலோபதிக்கு மட்டும்தானே அறிவியல் சொந்தமானது! தனது மொத்த அறிவியல் அறிவையும் பயன்படுத்தி, எனது தேடலுக்கான அறிக்கையை அத்துறை முன் வைக்கட்டும்

- ம.செந்தமிழன்

Wednesday, December 7, 2016

எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்! -பெங்களூரு கலவரம் குறித்து

எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்!

-பெங்களூரு கலவரம் குறித்து....

ம.செந்தமிழன்

’எந்தச் சூழலிலும் எதிர்வினை ஆற்றாதீர்கள்; எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்’ என்று என்னுடன் பயணிப்பவர்களிடம் கூறுவதுண்டு. எதிர்வினை, மறுவினை ஆகிய சொற்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாதவையாகிவிட்டதால், ‘Never react. Always respond’ என்று ஆங்கிலத்தில் கூறினால் உங்களுக்கு இன்னும் எளிதாகப் புரியும்.

திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டால் அல்லது மோசமான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டால், உடனடியாக அவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இந்தச் சூழல்களில் மறுவினை ஆற்றத் துவங்கினால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். எதிர்வினை ஆற்றுவது தற்காலிகப் பலன்களை வழங்கும், நிரந்தரத்தை முற்றிலும் ஒழித்துவிடும்.
ஏனெனில், அநீதிகளின் அடித்தளம் உணர்ச்சிகளால் மட்டுமே வலுப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் உணர்ச்சியின் பிடியில் ஒப்படைத்துவிடுவது அநீதிக்காரர்களின் சிறந்த தந்திரம். அதே உணர்ச்சி வழியில் சென்று வெற்றியடைந்த ஒரே ஒரு நேர்மையாளரைக்கூட இதுவரை உலகம் கண்டதில்லை, இனியும் காணப் போவதில்லை. இங்கே தீயவர்கள் கால்கள் ஓயாமல் ஆடிக்கொண்டுள்ளன. நல்லவர்களின் அடித்தளமோஎதிர்வினைகளில் சிக்கிக் கிடக்கிறது.

காவிரி நீர் வழங்குதலை முன்வைத்து தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் எல்லா வன்முறைகளும் அநீதிக்காரர்களின் பேயாட்டங்கள்தான். இப்போது நாம் எதிர்வினை ஆற்றுவதைக் காட்டிலும் மறுவினை ஆற்றுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம்மவரை அவர்கள் அடித்தால், திருப்பி அடிப்பதில் தவறேதும் இல்லை. அது எல்லா உயிரினங்களுக்கும் உள்ள இயல்புணர்ச்சிதான். புழுகூட சீண்டுபவரைத் தலைதூக்கி நோக்கும். பாம்புகள் தீண்டும், தேள் என்றால் கொட்டும், எறும்பெனில் கடிக்கும், தேனீக்களோ கூட்டமாகக் கடித்து கொலையே செய்யும். ஆகையால், திருப்பித் தாக்குதல் தவறல்ல.

பாம்புகளும் எறும்புகளும் மனிதர்களின் தாக்குதலுக்கு முன் வலுவிழக்கின்றன என்பதையும் இங்கே புரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், மனிதர்கள் அவ்வுயிரினங்கலின் இயல்புகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். விளைவாக, அந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறைகிறது அல்லது அவை இடமாற்றம் செய்துவிடுகின்றன.

காவிரி நீருக்காக நடக்கும் அட்டூழியங்கள் அல்ல, இப்போது நிகழ்பவை. காவிரியின் பேரால் ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்படுகிறது. பெங்களூருவில் குடியேறியுள்ள அயல் மொழியினரை, குறிப்பாகத் தமிழர்களை அப்புறப்படுத்தும் நோக்கம்தான் இதில் முதன்மையானது.
தமிழக – கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள மற்ற ஊர்களில் இவ்வளவு வன்முறைகள் அரங்கேற்றப்படவில்லை. குறிப்பாக, ஆசனூர் – சாம்ராஜ் நகர் மலைப் பகுதிகளிலும், மாதேஸ்வரன் மலை – கொளத்தூர் வனச் சாலை கிராமங்களிலும் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். கன்னடர் எவர் தமிழர் எவர் என்று எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் இரு இனத்தவரும் கலந்திருக்கின்றனர். அங்கெல்லாம் எவரும் நிர்வாணப்படுத்தப்படவில்லை, வாகனங்கள் கொளுத்தப்படவில்லை. இவைபோன்ற எல்லைப் பகுதிகள் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இரு இனத்தவரையும் தாங்கிக்கொண்டு விரிந்துள்ளன.

பெங்களூருவில் மட்டும் ஏன் இவ்வளவு வன்முறைகள் என்றால், தமிழர்களின் மீது கன்னடர்களுக்கு உருவாகியுள்ள ஆவேசம், பெங்களூருவை மையமாகக் கொண்டது. கர்நாடகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக கன்னட இனவெறி, அரசியல் வடிவம் அடைந்துள்ளது. வாட்டாள் நாகராஜ் போன்ற சிலர் இந்த இனவெறியைப் பொறுக்கித்தனமான அரசியலாக மாற்றி வைத்துள்ளனர். இந்தத் தலைவர்களைக் கன்னட மக்கள் மதிக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

வாட்டாள் நாகராஜ் தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தவர்தான். அவரது அமைப்பு மக்கள் செல்வாக்கு மிகுந்த அமைப்பல்ல, ஊடகச் செல்வாக்கும் பெரும்புள்ளிகளின் கள்ளத் தொடர்பும் கொண்ட அடியாள் அமைப்பு அது.
’தங்களுக்குச் சொந்தமான காவிரியைத் தமிழர்கள் பறிக்கிறார்கள்’ என்ற பொய்யைக் கன்னட இனவெறியர்கள் மிகவும் ஆழமாக அச்சமூகத்தில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். காவிரி என்பது இயற்கையாக ஓடும் நதி. அது பல்லாயிரம் ஆண்டுகால நிலவமைப்பு வரலாற்றைக்கொண்டுள்ளது. அரசியல் காரணங்களாலும், இன அடிப்படையிலும் தமிழகம் – கர்நாடகம் என்ற பகுப்பு உருவான பின்னர், காவிரி எனும் இயற்கை அங்கத்தினால் தனது போக்கினை மாற்றிக்கொள்ள முடியாது. நதி எப்போது நதிதான். அரசியல் எல்லைகள் மாறினாலும் மனிதர்களே இல்லாமல் அனைவரும் செத்தொழிந்தாலும் நதி எப்போதும் நதிதான்.

தமிழர்களின் வரலாற்றில் காவிரிக்கு உள்ள உறவு, அன்னைக்கும் பிள்ளைக்குமானது. இதே காவிரிதான் இப்போதைய கன்னடர்களுக்கும் அன்னை. இந்தக் கன்னடர்கள் ஒருகாலத்தில் தமிழராக இருந்த இனத்தவர்தான். எருமையூர் என்று சங்க இலக்கியங்கள் அழைக்கும் ஊர்தான் வடமொழியில் மகிஷவூர் என்றாகி, மைசூர் என இப்போது வழங்கப்படுகிறது. குடகுதான் கூர்க் ஆகியது. தமிழின் ஒருகிளைதான் கன்னடம் ஆகியது.
கர்நாடகத்தில் காவிரியைப் பற்றி பரப்பப்படும் செய்திகளில் உள்ள அழுத்தமும் ஆவேசமும் தமிழகத்தில் இருப்பதில்லை. மனதைத் தொட்டுக் கூறுங்கள், உங்கள் குழந்தைகளில் எத்தனைப் பேருக்கு சிலப்பதிகாரத்தில் உள்ள காவிரி விவரணை தெரியும். எத்தனைக் குழந்தைகளுக்குக் காவிரி உற்பத்தி ஆகும் இடம் தெரியும்? காவிரியின் போக்கு, இயல்பு, பருவமழைக் காலம், காவிரிக் கரையில் உள்ள ஊர்கள், விளைவிக்கப்படும் பயிர்கள், கடலில் அது கலக்கும் இடம் என இப்போதைய குழந்தைகளுக்குத் தெரியாத நதிதான் காவிரி.

வாட்டாள் நாகராஜ் அல்லது வேறு ஓர் இனவெறியர் ‘காவிரி எங்கள் தாய்’ என முழங்கினால், ‘ஆம் அவள் எங்கள் தாய்தான்’ என முழங்க அங்கே இலட்சக் கணக்கான குரல்கள் இருக்கின்றன. இங்கே காவிரியைப் பற்றிப் பேசப்படும் கூட்டங்களில் கூட்டம் கூடுவதில்லை, பாடங்களில் காவிரியின் முழுமை இல்லை, தமிழர்களின் வாழ்வில் இப்போது காவிரியே தேவையில்லை.
இப்போதைய தலைமுறைக்குக் காவிரி என்ற பேர் மிகவும் அந்நியமானது. நான் மிகுந்த வேதனையுடன் கூற விரும்பும் சேதி, ‘கன்னடர்கள் மட்டும் அடிக்காமல் இருந்தால் இங்குள்ள தமிழர்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் காவிரி எனும் பெயரே மறந்துபோகும்’ என்பதுதான்.

நாம் நமது வரலாற்றைப் படிப்பதில்லை, நமது மொழியைக் கற்பதில்லை, நமக்கான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில்லை. வரலாற்றை நிராகரிக்கும் எவரும் கோழைத்தனமாக அழிய வேண்டி இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஈழப் போரில் மக்கள் அழிந்துகொண்டிருந்தபோது, பல்லாயிரம் பேரோடு நானும் ஊர் ஊராகச் சென்று போருக்கு எதிராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் சந்தித்த மக்களில் பெரும்பாலானோர், ‘இங்கிருந்து பிழைக்கப்போனவர்களுக்கு இலங்கையில் எதற்குத் தனிநாடு?’ எனக் கேட்டனர். ஈழம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் தமிழர் நாடு என்ற வரலாறு கூட இங்கே மக்களிடம் பரப்பப்படவில்லை என்பதை அறிந்துகொண்டபோது, அங்கே எல்லாம் முடிந்துபோயிருந்தது.

காவிரியைப் பற்றிய வரலாறு, இயற்கையியல் மற்றும் அரசியல் நமது தலைமுறைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். காவிரியை நமது அன்னையாகப் பார்க்கும் மனம் நமக்கு வேண்டும். நம் பிள்ளைகள் காவிரியையும் இன்னபிற நதிகளையும் வணங்க வேண்டும்.

இயற்கையின் கொடைகளை வணங்கி வரவேற்பதுதான் காலம் காலமாக மனித சமூகத்தில் இருந்துவரும் மரபு. தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ள போலித்தனமான பகுத்தறிவுச் சிந்தனை நதியை வெறும் ‘விவசாய ஆதாரமாக’ப் பார்க்கக் கற்றுத் தந்துள்ளது.

’காவிரி நீர் இல்லாவிட்டால், காவிரி டெல்டாவில் வேளாண் உற்பத்தி இருக்காது’ என்று வாசிக்கப்படும் செய்தியைக்கேட்டு வெறுத்துப் போனவன் நான்.

’இன்றைக்கு அம்மா வராவிட்டால், வீட்டில் இரவு சாப்பாடு கிடைக்காது. அப்பா வராவிட்டால், செலவுக்குப் பணம் இருக்காது, மனைவி வராவிட்டால் துணிகளைத் துவைக்க முடியாது’ என்று சிந்திப்பது எவ்வளவு இழிவானதோ அதைப் போலத்தான், ‘காவிரி நீர் வராவிட்டால் டெல்டா விவசாயம் நடக்காது’ என்பதும்.

‘காவிரியின் ஓட்டம் தடைபட்டால் எங்கள் நிலத்தில் இரத்த ஓட்டம் நின்றதுபோல் நாங்கள் வருந்துவோம்’ என்ற சிந்தனைதான் இயற்கையின் பிள்ளைகளின் மனதில் இருக்க வேண்டியது. இந்தச் சிந்தனை இல்லாத காரணத்தினால்தான், அன்னை காவிரியில் நிகழும் மணல் கொள்ளையை அனுமதிக்கிறோம், அவள் மீது நச்சுக் கழிவுகள் கலப்பதை அனுமதிக்கிறோம்.
காவிரியை நமது நிலத்தின் இரத்த நாளமாகப் பார்க்கும்வரை, எந்த அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், கன்னடர்கள் காவிரையைத் தங்கள் தெய்வமாகத்தான் கருதுகிறார்கள்.

நேர்மையற்ற அரசியலில் காவிரி அன்னை சிக்கியிருக்கிறாள். கர்நாடக அரசியலில் காவிரி, தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான எளிய கருவி. தமிழக அரசியலில் காவிரி என்பது வெறும் விவசாயிகளின் பிரச்சினை. அதிலும் ’டெல்டா விவசாயிகளின்’ பிரச்சினை. இவை இரண்டும் சுயநலம் மிக்க சூதுகள்.

இப்போது அவர்கள் நம்மை அடிக்கிறார்கள். அவர்களை நம்மாலும் அடிக்க முடியும். ஆனால், இவை இரண்டும் தீர்வுகளை நோக்கி நகர்த்தப் போவதில்லை. ஏனெனில், இவை இரண்டுமே அடிப்படைச் சிக்கலுக்கான ‘எதிர்வினைகள்’தானே தவிர, ‘மறுவினைகள்’ அல்ல.

காவிரி அன்னையை மனதளவில் வணங்குங்கள். காவிரிக்காக இதுவரை நிகழ்ந்துள்ள போராட்டங்கள், செயல்பாடுகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கவனத்திற்கு வராமல், காவிரியின் உரிமைகளுக்காகப் போராடி மடிந்தோர் எண்ணற்றோர். இப்போதும் காவிரிக்காக குடும்பத்தை நிராகரித்து விட்டு வீதி வீதியாக அலைவோர் இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் அறிந்துகொள்ளுங்கள்.

காவிரி மட்டுமல்ல, நமது அனைத்து இயற்கை வளங்களும் பறிக்கப்படுகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இயற்கை வளங்களின் மீது தெய்வ பக்தி இல்லாமல் போனால் அவற்றைப் பறிகொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
காவிரி நதியைப் பாதுகாக்கும் திறன் இல்லாத வெற்றுக் கூச்சல் கூட்டமாக ஒட்டுமொத்தத் தமிழரும் மாற்றப்பட்டுள்ளனர் என்பது வெட்கக்கேடான உண்மைதான். ஆனால், இந்த நிலை மாறும். நம்மால் இந்த நிலையிலிருந்து மீண்டெழ இயலும்.

சொந்த மொழியின் மீதும், நிலத்தின் மீதும் ஆழ்ந்த அன்புகொண்ட எவரையும் படைத்தவர் பாதுகாக்கிறார்.

நாம் நமது மொழியை, இயற்கை வளங்களை, வரலாற்றை நேசிப்போம். காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டதுதான் அன்பு.

ஒரு நதியை நேசிப்பதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. மலையை, மரத்தை, பசுவை, காளையை, பன்றியை நேசிப்பதற்குக் காரணம் தேவையில்லை. எந்தச் சூழலில் படைக்கப்பட்டோமோ அந்தச் சுழலில் உள்ள அனைத்தும் நம் அங்கங்கள்தான். அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்குண்டு. இது அரசியல் அல்ல, அறவியல்.

எதிர்வினை ஆற்றுவது மிக எளிதானது. ’அவர் திட்டினால், நீயும் வசைபாடு, அவர் அடித்தால் நீயும் அடி, அவர் துப்பினால் நீயும் துப்பு’ என்பதுதான் எதிர்வினையின் மந்திரம். அரசியல்வாதிகள், திரைப்பட வணிகர்கள், மணல்கொள்ளையர் மற்றும் வேறுபல துறையினருக்கும் இதுதான் வசதியான மந்திரம். இந்த மந்திரத்தை ஓதித்தான் அவர்கள் காவிரியை நம்மிடமிருந்து பிரித்தார்கள்.

காவிரியில் நீர் பெருகினால், மணல் கொள்ளை நிகழாது என்பதற்காக நீர் வரத்துக்கு எதிராகச் சிந்தித்துச் செயல்படுவோர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள்தான் பெரும்பாலான தலைவர்களுக்கு ’ஊட்டச் சத்து’ ஊட்டுகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

நிரந்தரமாக இந்த சிக்கல் தீர்வதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற பெரும்புள்ளிகளுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. ஈரோடு, கரூர் பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளுக்குக் காவிரி நீரோட்டம் மிகப் பெரிய தொல்லை. இன்னும் ஏராளமான பேராசை வெறியர்கள் தமிழகத்தில் காவிரிக்கு எதிராகச் சிந்தித்துச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
காவிரியின் மீதான அன்பும் அக்கறையும் எளிய மனிதர்களான நமக்கு வேண்டும்.

இந்தப் புரிதல்களுடன் நாம் மறுவினையாற்றத் துவங்குவோம். சில முன்னெடுப்புச் செயல்பாடுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. சங்ககாலத்திலிருந்து இன்றுவரையிலான காவிரி வரலாற்றை அறிந்துகொள்ளுங்கள்.

2. காவிரி நதிக்காகப் போராடியோரைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தகவல்களை எல்லாம் செம்மை சமூகத்தின் வழியாக உங்களிடம் சேர்ப்பிப்பது என் கடமை.

3. காவிரி நதியின் மீது தமிழகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுங்கள் எழுதுங்கள்.

4. காவிரி உற்பத்தியாகும் குடகுமலைக்குச் சென்று பார்ப்பதைக் கடமையாகக் கொள்ளுங்கள். காவிரி ஓட்டத்தின் பாதை நெடுகிலும் பயணம் செய்யுங்கள்.

5. குழந்தைகளுக்கு காவிரியை முறையாக, முழுமையாக அறிமுகம் செய்யுங்கள்.

6. ’காவிரி நதி என் அன்னை’ என்ற முழக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலதிலும் பதித்துப் பரப்புங்கள்.

7. பெங்களூருவில் பணியாற்றும் தமிழர்கள், அந்த ஊரைச் சீரழிக்காத வகையில் நடந்துகொள்ளுங்கள். குறிப்பாக, உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்காமல் வாழுங்கள்.

 உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக அயலவர் மீது தாக்குதல் நடத்தும் வழக்கம் புவியெங்கும் வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது.

இப்பணிகளை நாம் செய்யத் துவங்கினால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து, ‘காவிரி நதியின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட’ பெரும் கூட்டம் தமிழகத்தில் இருக்கும். அப்போது காவிரி அன்னையை எவரும் தடுக்கத் துணிய மாட்டார்கள். மிக முக்கியமாக, ‘காவிரியைப் பாதுகாத்துக்கொடுங்கள்’ என எந்தத் தலைவரிடமும் நமது சமூகம் நின்றுகொண்டிருக்காது. ஏனெனில், மக்கள்தான் தலைமையை உருவாக்குகிறார்கள். சமூகம் விழிப்படைந்தால், தலைமைகள் மாறிவிடும்.

அவ்வப்போது நிகழும் சிக்கல்களுக்கு எதிர்வினையாற்றிவிட்டு, அடுத்த சிக்கலுக்குத் தாவிக்கொண்டிருப்பது இப்போதைய சமூகத்தின் கேடுகெட்ட வழக்கம். எதிர்வினைகளை எல்லாம் வரம்புக்குள் வைக்க வேண்டும்.
காவிரி மட்டுமல்ல நமது அனைத்து மரபு உரிமைகளையும் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது, ‘மறுவினையாற்றுதல்’தான்.

இணைப்புப் படம்: Paul Gregory

காளியாகிய நெருப்பைச் சுவைத்தபோது இது நிகழ்ந்தது…!

காளியாகிய நெருப்பைச் சுவைத்தபோது இது நிகழ்ந்தது…!
ம.செந்தமிழன்
 -

அமாவாசைக்கு மறுநாள் இரவில் அந்த மலை அடிவாரத்தில் அவன் அமந்திருந்தான். பாறை ஒன்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவாறு, மலைக் காட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த இருளிலும் அவனது நிழல் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தது. இருளில் மலைக்காட்டின் அழகு, மயிர்க்கால்களை எழும்பச் செய்தது. எந்த அழகையும் ஆழமாக உணர வேண்டுமானால், கண்களை மூடிக்கொள்வது அவன் வழக்கம். எந்த உரையாடலும் சிறக்க வேண்டுமானால், வாயை மூடிக்கொள்வதும், நற்சொற்களைக் கேட்க விரும்பினால் செவிகளைச் சாத்திக்கொள்வதும், நல்லாற்றல் கிடைக்க வேண்டுமானால் பட்டினியாகக் 8கிடப்பதும் கூட அவன் வழக்கங்கள். அதாவது அவன் ஒரு மூடன்.

மூடன் என்பதால் அவனது நிழலுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஏனெனில், நிழலுக்கு வெளிச்சம் ஆகாது. நிழலுக்கு தர்க்கம் பிடிக்காது. தர்க்கம் பேசுவோர் நிழலைத் துரத்திவிடுகிறார்கள் அல்லவா. நீங்கள் கூட உங்கள் வாழ்விடத்தைக் கவனியுங்கள். நிழல் விழாதவகையில் மிகை வெளிச்சத்தைத்தான் பரவச் செய்கிறீர்கள். எல்லா இரவுகளும் விளக்குகளால் சீரழிகின்றன. நவீன மனிதர்கள் நடமாடும் எல்லாக் காடுகளும் இரவை இழக்கின்றன. மின்மினிப் பூச்சி இனமே உங்கள் வாழ்விடங்களில் அழிந்துவிட்டது. அந்தளவுக்கு வெளிச்சத்தின் மீது பற்றுகொள்கிறீர்கள்.
இந்த மூடனது நிழல் இருளை விரும்பும். வானிலிருந்து கசியும் வெளிச்சமே எல்லா இரவுகளுக்கும் போதுமானது என்பது அந்த மூடன் கருத்து. இதுவே நிழலுக்கும் அவனுக்குமான பிணைப்பு.

விண்மீன்கள் கசியவிட்ட நுண் வெளிச்சத்தில் மலைக் காடு வனப்பாகக் காட்சியளித்தது. மலையின் உச்சியில் தெரிந்த ஒற்றைப் பாறையில் இரு கண்கள் தெரிந்தன. அக்கண்கள் மூடனை உற்றுப் பார்த்தன. அவன்தான் கண்களை மூடிக்கொண்டிருக்கிறானே, அதனால் அவனுக்கு இந்தக் காட்சி மிகத் தெளிவாகத் தெரிந்தது.

கண்கள் திறந்த அப்பாறையின் கீழே மேலும் இரு பாறைகள் இருந்தன. அப்பாறைகளின் இடுக்குகள் வழியாக மழைநீர் வழிந்துகொண்டிருந்தது. இந்த இரு பாறைகளும் பெரிய முலைகளாகின. இன்னும் சற்று கீழே மலையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அதற்கும் கீழே விவரிக்கவியலாத மரங்களும் புல்வெளிகளும் இருந்தன.

மூடன் விழிகளை மேலும் இறுக்கிகொண்டான்.

மலை அடிவாரத்தில் அவன் உட்கார்ந்திருந்த பாறையே இரண்டு பாதங்களின் வடிவம்தான் என்பதைக் கடைசியாக அறிந்துகொண்டான். பாதம் அசைந்தது. இவனும் அசைந்தான் நிழலும் அசைந்தது. மலைக் காட்டின் பக்கவாட்டுப் பகுதிகளில் தெரிந்த ஓடைகள் இரண்டும் கரங்களாகின. மூடனும் நிழலும் இடது பாதத்தில் அமர்ந்திருந்தனர்.

மூடனது அகவெளி விரியத் துவங்கியது. மலைக்காடு தேவியானது. தேவி, அன்னை, காளி போன்ற பல்வேறு பெயர்களால் அவளை அழைப்பது மூடன் வழக்கம்.

எல்லாச் சொற்களும் ஒரு பொருளைக் குறிப்பவைதான் என அவன் நம்பினான்.

தேவி எழுந்து நின்றாள். பாதத்திலிருந்து மூடனும் நிழலும் இறங்கினார்கள். மூடன் தேவியை நோக்கி ஆர்ப்பரித்தான். தேவியாகிய அன்னை மூடனை நோக்கி ஆடினாள். மலைக்காடு நிமிர்ந்து எழுந்து ஆட்டமாக ஆடியதைக் கண்ட நிழல், தானும் ஆடியது. மூவரும் இணைந்து தாண்டவமாடினர். தேவியின் முலைகளில் வழிந்த நீரோடைகள் பால் ஊற்றுகளாகத் தெரிந்தன. ஆடிய ஆட்டத்தில் பால் தெளித்து மூடனை நனைத்தது.

தேவி மூடனைத் தன் விரலால் தூக்கி மார்பில் சாய்த்தாள். அவனோ மார்பின் பள்ளம் வழியாக சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து எழுந்து ஆடினான். நிழல், தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் ஓடியாடியது.

’அன்னையே உன் மீது நான் படர்வது நியாயமா?’ என மூடன் கேட்டான்.
’எல்லாப் பிள்ளைகளையும் நான் என்மீதுதான் படரவிடுகிறேன்’ என்றாள் அன்னை.

’அன்னைக்கும் பிள்ளைக்கும் மரியாதைக்குரிய இடைவெளி வேண்டாமா?’ என்றான் அவன்.

‘மரியாதை இருக்குமிடத்தில்தான் இடைவெளி இருக்கும். நமக்குள் இடைவெளி தேவையில்லை’ என்றாள் அவள்.

’நான் மலைக்காட்டினைக் காண வந்தேன். நீ இங்கே தோன்றியதேன்?’ எனக் கேட்டான் மூடன்.

’என் படைப்பில் எதைக் கண்டாலும் அதில் எனைத்தான் காண்பாய்’ என்றாள் தேவி.

‘இங்கே மலைகளையும் காடுகளையும் அழிக்கிறார்களே…அவர்கள் உன்னை அழிப்பதாக அர்த்தமா?’ எனக் கேட்டான் மூடன்.

‘தலை மயிரை வெட்டினால் மயிருக்கு இழப்பென்ன? விரலை வெட்டினால் விரலுக்கு இழப்பென்ன? ஆண் குறியை வெட்டினால் குறிக்கு இழப்பென்ன? முலைகளை அறுத்தெறிந்தால் அவற்றுக்கு இழப்பென்ன? மலைகளை வனங்களை அழித்தால் எனக்கு இழப்பென்ன?’ எனக் கேட்டாள் தேவி.

’என் சந்ததிக்கு மலைகளும் காடுகளும் இருக்க வேண்டாமா?’ என மூடன் கேட்டான்.

நிழல் உரக்கச் சிரித்துக் கத்தியது, ‘இதோ இந்த மூடனுக்கே அடுத்த வேளை உணவு எவர் வீட்டில் எனத் தெரியாது. இவன் சந்ததிக்காகப் பேசுகிறான்’ என்றது நிழல். பின்னர் அதுவே கூறியது, ‘அதனால்தான் நான் இவன் நிழலாக இருக்கிறேன். எப்போதும் மூடர்களின் நிழலாக இருப்பது சரியானது. அறிவாளிகளோ வெளிச்சத்தை நாடுவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்’ என்றது நிழல்.

’சந்ததிக்குக் காடுகள் வேண்டும்’ என மூடன் கேட்டதும், தேவியின் உருவம் வேறு விதமாக மாறியது. இப்போது அவள் காளி ஆனாள். உற்சாகத் தாண்டவம் மாறிப்போனது. அவளது அசைவுகளில் தீப்பொறிகள் தெறித்தன. அப்பொறிகளில் சில மரங்கள் சடசடத்து எரிந்தன.

மூடனைப் பார்த்து காளி கூறினாள், ‘சந்ததிக்கு வாழ்க்கை வேண்டும் என நீ உண்மையிலேயே விரும்புகிறாயா? அப்படியானால், நெருப்பைப் பற்றிக்கொள்’

‘நெருப்பா…? அது ஆபத்தான பூதமாயிற்றே…’ என்றான் மூடன். வான் அதிரும்படியாகக் கூக்குரலிட்டுப் பேசினாள் காளி, ‘இந்தக் காடு நெருப்பில்தான் பிறந்தது. மரங்களும் பறவைகளும் நெருப்பில்தான் பிறந்தன. என் தலைவனுடைய நீரும் என்னுடைய நெருப்பும் புணர்ந்துதான் உங்களைப் படைத்தோம். ஆகவே, நெருப்பை நீயும் பற்றிக்கொள்’ என்றாள் அவள்.
’நெருப்பு என்னைச் சுடாதா?’ எனக் கேட்டான்.

‘நெருப்பு தன்னை விட்டு விலகுவோரைச் சுடும். உள்ளிருப்போரை வடிவமைக்கும். இந்த பூமியின் உள்ளிருப்பது நெருப்புதான். நெருப்புதான் பூமியின் வடிவத்தைக் காப்பாற்றிக்கொண்டுள்ளது. நெருப்பை வயிற்றுக்குள் வைத்திருக்கும் நிலம் நிம்மதியாக இருக்கும். நெருப்பிலிருந்து விலகி நிற்கும் மரங்கள் நெருப்பில் அழியும். நீ உள்ளே வந்துவிடு, உன் வடிவம் வலுவடையும்’ என்றாள் காளி.

’அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?’ என மூடன் கேட்டான்.

‘நீ நெருப்பின் வயிற்றுக்குள் வந்துவிட்டால், நீ எரிக்கத் துவங்குவாய். இங்கே உயிர்கள் வாழும் சூழல் நிலைபெற வேண்டுமென்ற உன் வேட்கையின் வெப்பம் பிசாசுகளின் உடலைப் பொசுக்கும். மேலும் பலரை நீ நெருப்புக்குள் குடியமரச் செய்வாய்.

என் தலைவனுக்கு புழுவும் மனிதரும் ஒன்றுதான். அவர் எல்லாவற்றையும் உயிர்களாகப் பார்க்கிறார். புழு அழிந்தாலும் அது வேறு வடிவத்தை அடைகிறது. அதன் உயிர் அழிவதில்லை. அதேபோல மனிதர்கள் அழிந்தாலும் என் தலைவனுக்குக் கவலை இல்லை. ஏனெனில், அவருக்கு உயிர்கள் போதும். நான் உருவத்தைச் சுமப்பவள்.

எனக்குப் புழுக்கள் புழுக்களாக வாழ வேண்டும். மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும். எனது உணர்ச்சிகளை, உறவுகளின் மீதான பற்றுதலை எல்லா உயிரினங்களிலும் பெண்மைக்குக் கொடுத்தேன். எல்லாப் பெண்களுக்கும் உறவுகள் மேன்மையானவை. நெருப்பின் வயிற்றில் நுழைந்த பின்னர், நீயும் பெண்ணாகிறாய். வா…வந்து தீயாகுவாய்’ என்றாள் காளி.
மூடன் எழுந்து காளியின் நாக்கில் எரிந்த நெருப்பை நக்கினான். இவனது நாக்கும் கொழுந்துவிட்டெரிந்தது. அந்தக் கொழுந்தின் ஒரு பகுதியை நிழலுக்கு நீட்டினான். நிழலும் தீயைச் சுவைத்தது.

காளியும் இவர்கள் இருவரும் இணைந்து நெருப்பாட்டம் ஆடிக் களித்தனர்.
நீரையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் நெருப்பு தேவை என்பதை இந்தத் தாண்டவம் உறுதிப்படுத்தியது. அதன் பின்னர் மூடனும் நிழலும் தங்கள் சமூகத்தில் தீக் கங்குகளைப் பரிசளித்தனர்.

அக்கங்குகளை அணைக்காமல் வளர்த்தவர்களில் பெரும்பகுதியினர் பெண்களாக இருந்தனர் அல்லது ஆணாகப் பிறந்தும் பெண்மையின் மேன்மையை உணர்ந்தவர்களாக இருந்தனர்.

இணைப்புப் படம்: Paul Gregory
 

நின் வினைகள் போற்றி!

நின் வினைகள் போற்றி!
ம.செந்தமிழன்

1.
இல்லை என்போருக்கு இல்லாமல் போகிறாய்
உண்டு என்போரின் உடன் உறைகிறாய்
நின் அருமை போற்றி!
கேள்விகள் கேட்போருக்கு பதில் அளிக்கிறாய்
சரணடைவோருக்கோ தீர்வுகளைத் தருகிறாய்
நின் பெருமை போற்றி!
அறிவை நாடுவோரை வேடிக்கை பார்க்கிறாய்
அருள் நாடுவோரின் உள் நுழைகிறாய்
நின் பேதம் போற்றி!
பெண்மையைப் பழிக்கும் கூட்டங்களின்
பெண்களை ஆண்மையாக்கினாய்
பெண்மை மதிப்போருக்கு
அண்மையில் நின்றாய்
நின் பாதம் போற்றி!
மலம் அள்ளுதல் இழிவென்ற சமூகத்தின்
இல்லத்தினுள் மலவறை வைத்தாய்
அவமல்ல எத்தொழிலும் என்போருக்கு
எவ்விடமும் தூய்மை செய்தாய்
நின் வினைகள் போற்றி!
பிறவியில் பேதம் காண்போர்
பிறவியில் வாதம் வைத்தாய்
அறவினை மட்டும் செய்வோர்
உறவினை மேன்மை செய்தாய்
நின் சினங்கள் போற்றி!

…………………………………………………………
2.
சமைத்தல் இழிவென்போர்
பெண்ணைப் பிரிதல் காண்கிறேன்
எப்பணியும் எமதே என்போர்
இணைந்து களித்தல் காண்கிறேன்
நோய்கள் உண்டென்போர்
அலைந்து திரிதல் காண்கிறேன்
படைப்பில் நோயிருக்காதென்போர்
மகிழ்ந்து துளிர்த்தல் காண்கிறேன்
அறிவே இறுதி என்போர்
அறிவால் அழிதல் காண்கிறேன்
மனமே அறுதி என்போர்
பரத்தில் பறக்கக் காண்கிறேன்
செல்வம் காக்கும் என்போரின்
செல்வத்தை நோய் அழிக்க
கர்வம் காக்கும் என்போரின்
கர்வத்தைக் கடன் அழிக்க
அதிகாரம் காக்கும் என்போரின்
அதிகாரத்தைப் பகை அழிக்க
அறிவே காக்கும் என்போரின்
அறிவைச் சூது அழிக்க
புகழே காக்கும் என்போரின்
புகழை விதி அழிக்க
படைப்பே எனைக் காக்கும் என்போரைப்
படைப்பே நீ காக்க!

…………….
3.
அடைத்தால் பெருஞ்செல்வம்
உடைத்தால் மண்கலயம்
நடத்தும் வாழ்க்கையெல்லாம்
துடைக்கும் வன்மை உனது!
உணர்ந்தால் உயிர் நனிகொள்ளும்
துறந்தால் மயிர் நுனியும் கொல்லும்!
(நனி – மிகுதி. உயிர் நனி கொள்ளும் – உயிர் தனது மிகுதியான வாழ்வை வாழும்)
இணைப்புப் படம்: Paul Gregory


Published on : 18/010/2016

 

தாகம் தணிக்க வாரீர்!

தாகம் தணிக்க வாரீர்!

ம.செந்தமிழன்


சேறும் சகதியுமாகக் கலங்கிக் கிடக்கும் நீரைப் பருகுவதற்காக, காத்து நிற்கும் குழந்தைகளை நேரில் கண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
இருபது அடி ஆழத்திற்குக் குழி வெட்டி, அதன் கீழே சொட்டு சொட்டாக ஊறிவரும் உப்பு நீரை வரிசையில் நின்று இறைத்துச் செல்லும் மனிதர்களைக் காணும்போது, உங்கள் மனம் என்ன சொல்லும்?
எப்போதாவது ஒருமுறை ஊருக்குள் வந்து செல்லும் குடிநீர் விற்பனை வாகனத்தைக் கண்டதும், கூட்டம் கூட்டமாக ஓடிச் சென்று மோதும் மக்களைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள்?
ஒரு குடம் குடிநீர் ஐந்து ரூபாய் விலைக்கு விற்கப்படுவதையும், அந்த நீரும் மணல் வாடையுடன் கலங்கி இருப்பதையும் நேரில் பார்க்கையில் உங்கள் மனசாட்சி எப்படித் துடிக்கும்?
இந்த மக்கள் வாழும் நிலம் நிலம் யாவும் சீமைக் கருவேல மரங்கள் பல்கிப் பெருகிவிட்டதையும், அங்கே இருந்த இயற்கையான புதர்ச் செடிகள் அழிந்தே போய்விட்டதையும் காணும்போது உங்கள் சிந்தையில் எவ்வளவு ஆவேசம் தோன்றும்?

சாக்கடைபோல் தேங்கிக் கிடக்கும் சேற்று நீரில், மயில்கள் நீர் பருகுவதைக் காணும் அவலம் உங்களுக்கு வேண்டாம். நேற்று அந்த அவலத்தையும் நாங்கள் கண்டோம்.
மயில்களின் அழகும் கம்பீரமும் அவற்றை தெய்வத்தின் வாகனமாகச் சித்தரிக்க வைத்தவை. மயில்களைக் கண்டால் பரவசமடைந்து வணங்கும் மனிதர்கள் வாழும் மண் இது. இந்த நிலத்தின் ஒருபகுதியில் மயில் குஞ்சுகள் சீமைக் கருவேல முட்களின் ஊடாக தத்தித் தத்தி வசிக்கின்றன. வயல்களில் பொறுக்குவதற்குக் கூட புழு பூச்சிகள் இல்லை. கொஞ்சமாவது, ஈரம் மண்ணில் இருந்தால்தானே புழுக்கள் வாழும்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், மழை வரும் என்ற நம்பிக்கையில், வயல்களில் விதை தூவி விடுவார்கள். அதன் பின்னர் வரும் மழையில்தான் நெற்பயிர்கள் முளைக்கும். மழைக்குப் பின் விதைப்பவர்களை அறிந்திருப்பீர்கள். மழைக்கும் முன் விதைப்பவர்களை அங்கு நாங்கள் கண்டோம்.
இம்முறை, இதுவரை மூன்று முறை விதைக்கப்பட்டுவிட்டது. ஒருமுறையும் மழை வரவில்லை. வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. எல்லா வயல்களிலும் நெல் விதைகள் உயிர் நீருக்காகக் காத்துக் கிடக்கின்றன. சீமைக் கருவேல மரங்களோ மீதமிருக்கும் ஈரத்தையும் உறிஞ்சி செழிக்கின்றன.

இணைப்பில் உள்ள முதல் படத்தைப் பாருங்கள். ஒரு குழியில் சிறிதளவு நீர் ஊறுகிறது. மக்கள் அந்த நீரைச் சேறுடன் இறைக்கிறார்கள். அதுதான் அவர்களின் ஒரே குடிநீர் ஆதாரம். அந்தக் குழிக்குள் சீமைக் கருவேல மரத்தின் வேர்கள் நீண்டு கொண்டுள்ளன. தாகம் தணிக்க ஊறும் அந்தக் கலங்கிய நீரை உறிஞ்சுவதிலும் சீமைக் கருவேல மரங்கள் முந்துகின்றன.

நேற்று நானும் கலாநிதியும் அப்பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். இன்னும் ஒரு வாரத்தில் பணிகளைத் துவக்க இருக்கிறோம்.

’இராமநாதபுரம் பகுதிகளில் நல்ல மழை பெய்யட்டும்’ என வேண்டுங்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையெனில், ‘அங்கே நல்ல மழை பெய்ய வேண்டும்’ என மனதால் விரும்புங்கள். எல்லாம் ஒன்றுதான்.

நாம் ஒன்றிணைந்து அம்மக்களில் சிலருக்கேனும் நல்ல குடிநீரை உறுதி செய்ய வேண்டும். அந்நீரை அவர்கள் சுகமாகப் பருக வேண்டும். அக்காட்சியைக் காண்பதில் நான் பெருவிருப்பத்துடன் இருக்கிறேன். என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் என் இறை, இவ்விருப்பத்தையும் நிறைவேற்றட்டும்!

இப்போது பெய்யப் போகும் மழையைச் சேகரித்து, வெகு சிலருக்காவது குடிநீராக மாற்றித் தர செம்மை அகல் திட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
.............................

இராமநாதபுரம் பணிகளுக்கென நன்கொடையைப் பணமாக அனுப்ப வேண்டாம். எந்த வங்கிக் கணக்கையும் நாங்கள் முன்வைக்கவில்லை. இப்பணியில் ஈடுபட விரும்புவோர் செய்ய வேண்டியவை:

1. முதலில் உங்களைத் தன்னார்வராக இணைத்துக்கொள்ளுங்கள்.

2. எந்தக் காலகட்டத்தில் பணிகள் நடக்கும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பார்கள். அந்தக் காலத்தில் எத்தனை நாட்கள் உங்களால் அங்கு வர முடியும் என்பதைத் தெரிவியுங்கள்.

3. பணிகள் நிகழும் கிராமத்திற்கு வந்து ஓரிரு நாட்களாவது தங்கி பணியாற்றுங்கள்.

4. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை நீங்கள் வரும்போது தெரிவிப்போம். அவற்றுக்கான தொகையை அங்கே வந்து செலுத்துங்கள். அல்லது நீங்களே பொருட்களை வாங்கி அனுப்புங்கள்.

5. நேரில் வரவே இயலாதவர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி, தேவையான பொருட்களை வாங்கித் தருவதற்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
6. இயன்றவரைக்கும் களப்பணியாற்ற முன்வாருங்கள்.

இம்மழைக்காலத்திற்குப் பின்னர் நாம் பணியாற்றும் கிராம மக்கள், குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் நிம்மதியாக தாகம் தணிக்க இணைவோம் வாருங்கள்.
செம்மை அகல் பணிகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், இத்திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு வேறுபல அறச் சிந்தனையாளர்களும் இக்களத்தில் இறங்க வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் ஒன்றுகூடினால், வறட்சியில் வாடும் உயிர்களுக்கு மழைநீர் வார்க்க முடியும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
இராஜேஸ்வர்: 97915 12095
பாலாஜி: 96770 73007
https://www.facebook.com/photo.php?fbid=10208956151678787&set=a.1135580027456.2020908.1165998916&type=3&theater

Published on : 28/10/2016

காவிரி வரலாற்றுக் காணொளிகள் வெளியீடு

காவிரி வரலாற்றுக் காணொளிகள் வெளியீடு :
பெரும் பணியின் சிறிய துவக்கம் இது!
ம.செந்தமிழன்



ஏறத்தாழ நூறு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் ஏவப்பட்டன. 90 வயது மூதாட்டியை வீட்டிற்குள் பூட்டி வைத்து, வீட்டோடு கொளுத்தினார்கள். ஒன்றரை இலட்சம் பேர் அகதிகளாக விரட்டப்பட்டனர். குடிக்க நீரின்றி, உணவின்றி, ஒதுங்க வீடின்றி காடுகளில் பதுங்கிக் கிடந்தனர் பல்லாயிரம் மக்கள். கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இவ்வளவும் தமிழர்கள் மீது கன்னட இன வெறியர்கள் நடத்திய தாக்குதல்கள். 1991 ஆம் ஆண்டு டிசம்பர், 1992 ஜனவரி ஆகிய இருமாதங்களில் இந்தக் கொடுமைகள் அரங்கேறின.

‘தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர வேண்டும்’ என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிற்குக் கன்னடர்கள் ஆற்றிய எதிர்வினைகள் மேலே உள்ளவை.

இவையெல்லாம் உங்கள் கவனத்திற்கு வந்தனவா எனத் தெரியவில்லை. இவற்றைப் பற்றி நீங்கள் தீவிரமாகச் சிந்தித்திருந்தால்கூட, இந்த 25 ஆண்டுகளில் காவிரி நதி மீதான தமிழர் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கும்.
போராட்டம் என்பது விடுதலைக்கான வழிமுறைகளில் ஒன்று. போராட்டம் மட்டுமே தீர்வு தரும் என நான் நினைக்கவில்லை. போராட்டம் எனும் வழியைத் தேர்ந்தெடுக்கும் முன், ‘நமக்குத் தீர்வு வேண்டும்’ என்ற விருப்பம் உருவாக வேண்டும். அந்த விருப்பம் தெள்ளத் தெளிவானதாகவும் அழுத்தமானதாகவும் இருந்தால், எல்லா விடுதலைகளும் சாத்தியமாகும்.
மிக நீண்ட காலமாக காவிரி நதியின் மீது அலட்சியம் காட்டியுள்ளோம். நாம் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. அவற்றிற்கெல்லாம் முன்னர், காவிரியின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். வரலாறுதான் மரபுகளைத் தாங்கியுள்ள வேர். வேரை உணராத மரங்கள் இற்றுவிழுகின்றன. நம் வேர் இன்னும் உயிர்ப்போடுள்ளது. நாம் அதை உணர்ந்தால் போதும், தேவையான ஆற்றல் நம் கிளைகளுக்கு வழங்கப்படும்.

காவிரிக்கும் நமக்குமான வரலாற்று உறவு, இக்காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் இக்காணொளியைப் பொறுமையாக உள்வாங்குங்கள். பின்னர், இக்காணொளி இணைப்புகளையும் இவற்றில் உள்ள தகவல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ’காவிரி நதி உயிர்ப்போடு மீண்டு வர வேண்டும்’ என்ற விருப்பத்தை மனதில் நிலைநிறுத்துங்கள். நாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களுக்கும் அந்த விருப்பம் வழிகாட்டும்.
காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ‘எதிர்வினையாற்றாதீர்கள், மறுவினையாற்றுங்கள்’ என்று ஏற்கெனவே எழுதினேன். அக்கட்டுரையில், ‘காவிரியின் வரலாற்றினைத் தொகுத்து வெளியிடுவோம்’ என உறுதியளித்திருந்தேன். அதன்படி, கடந்த இரு மாதங்களாக இப்பணியில் ஈடுபட்டோம்.

https://www.facebook.com/directorsenthamizhan/posts/10208613230145963

செம்மைக் குடும்பத்தினரான ஆனந்த் செல்லையா, கலாநிதி, நளினி, காந்திமதி ஆகியோரின் மிகக் கடுமையான உழைப்பு இப்பணியில் உள்ளது.
காவிரி ஓட்டப் பாதையில் உள்ள காடுகளுக்கு என்னுடன் பயணித்து, ஒளிப்படங்கள் பதிவு செய்தார் பால் க்ரிகோரி.
இக்காணொளிகளை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டி, பொறுமையாக விளக்குங்கள்.

காணொளிக் காட்சிகள் ஐந்து பகுதிகளாக உள்ளன. வரிசைப்படி காணுங்கள். தரவிறக்கம் செய்வதற்காக, youtube இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
காணொளிப் பகுதிகளின் தலைப்புகள்:

1. தமிழர் வரலாற்றில் காவிரி
2. 1991: கறை படிந்த காலம்
3. தீர்ப்புகளும் அத்துமீறல்களும்
4. காவிரிப் போராளிகள்
5. உண்மையான அன்புதான் உரிமை பெற்றுத் தரும்.
மேற்கண்ட வரிசைப்படி காணொளிகளைக் காணுங்கள்.

செம்மைவெளியீட்டகப் பக்க இணைப்பு:
https://www.facebook.com/Semmai-Publications-2439520491109…/

Published on : 01/11/2016

ஊர் திரும்புங்கள் எனக் கூறுவது, நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்ட வடிவம்தான்!

          ஊர் திரும்புங்கள் எனக் கூறுவது,                    

நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்ட வடிவம்தான்!

ம.செந்தமிழன்

 

செம்மை வாழ்வியல் வகுப்பின்போது, மக்கள் கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான எனது விளக்கங்களும்.

இப்பொழுது எல்லாம் கடைகளில் வாங்கும் காய்கறிகள், அரிசி, போன்றவற்றில் அதிகமான உரம் ரசாயனம் இருக்கிறதே அதற்கு என்ன செய்ய வேண்டும்?

- விவசாயம் என்றாலே இயற்கையாகச் செய்வது தான். இரசாயன வேளாண்மையா இயற்கை வேளாண்மையா என்பதே தவறு. இரசாயனம் சேர்த்து செய்தால் அது வேளாண்மையே இல்லை. விவசாயம் என்றாலே இரசாயனம் கலக்காமல் விளைவிப்பது தான். அப்படி விளைவது தான் நல்ல காய்கறிகள். அது கிடைக்காத நிலைமைக்கு நாம் இப்பொழுது வந்து விட்டோம். பணம் இருந்தால் கூட நல்ல காய்கறிகள் கிடைக்காத வறுமையில் உள்ளோம். 

நஞ்சு இல்லாத உணவு வேண்டும் என்பது பெரிய புரட்சி இல்லை நமது அடிப்படை உரிமை. நாம் மிக மோசமான இடத்தில் உள்ளோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நஞ்சு இல்லாத காய்கறிகள் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கூட காய்கறிகள் கிடைக்காது. கடல் மீன் கூட நஞ்சு இல்லாமல் கிடைப்பது இல்லை அணுக்கழிவுகள் முழுவதையும் கடலில் தான் கொண்டு போடுகிறார்கள்.

இந்த நிலைமைகள் மாற வேண்டும் என விரும்புங்கள். இயற்கையான சூழல் பெருக வேண்டும், இயற்கையான உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுத் தோட்டங்களில் கவனம் செலுத்துங்கள். நிலம் வைத்திருப்போர், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுங்கள். எவராவது நமக்கு உற்பத்தி செய்து தருவார், நாம் அதை சாப்பிடலாம் என்ற நினைப்பிலிருந்து வெளியேறுங்கள். நிலம் இல்லாதோர், இயற்கை விளைபொருட்களைத் தேடி வாங்குங்கள்.

நஞ்சில்லா காய்கறி வாங்க வழி உள்ளதா?
- இயன்றவரை, அவரவருக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டால் தான் இதற்கு எல்லாம் மாற்று கிடைக்கும் 

விதை பற்றாக்குறை உள்ளதா?
அது அடுத்த கட்ட பிரச்சனை , உள்ள விதைகளுக்கே இன்று விவசாயம் செய்ய ஆள் இல்லை. சாதாரண செயல் திட்டம்தான் , பசுமைப் புரட்சியோ , வெண்மைப் புரட்சியோ இல்லை . சில காலத்திற்கு முன், நூற்றுக்கு எண்பது பேர் விவசாயம் செய்தார்கள். அவர்கள் தங்களுக்கான உணவையும் மீதமுள்ள இருபது பேருக்கான உணவையும் உற்பத்தி செய்தார்கள். இதைப் பெரும் வியாபாரமாக மாற்ற நினைத்துதான் பசுமைப் புரட்சி என்ற கொடிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். எண்பது சதவீதமாக இருந்த விவசாயிகள் இப்போது ஏறத்தாழ அறுபது சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். இவர்களால், மீதமுள்ள நாற்பது சதவீதத்தினருக்கு இயற்கையான உணவைக் கொடுக்க முடியாது. இயற்கையில், அவ்வாறு விளையாது .

உணவு உற்பத்தி செய்பவர்களை /விவசாயிகளை குறைப்பதுதான் திட்டமா ?
- ஆம். அதுவே அவர்களது நோக்கம் . உணவு உற்பத்தியை பெரும் உற்பத்தியாக மாற்றவேண்டும், 5 சதவிகிதம் பேரே உணவு உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 95 சதவிகிதம் பேரும் இந்த 5 சதவிகிதம் பேரையே உணவுக்காக
நம்பி இருக்கவேண்டும் . இவ்வாறு மாற்றுவதே திட்டம். இது அழகாக நடந்தேறி வருகிறது .இதைத் தடுக்கவே நாம் ஊர்திரும்புங்கள் ஊர்திரும்புங்கள் என்று கூறுகிறோம். இது சேவை அல்ல , தேவை.

உங்களுக்கு தேவையானதாவதையாவது உற்பத்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மட்டுமாவது செய்து கொள்ளவேண்டும்.

அவ்வளவுதான் ஒருவரால் செய்ய முடியும். மறுபடியும் மறுபடியும் இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்து தருவார்கள் அவர்களிடம் நாம் இருபது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று எல்லாம் நினைத்து கொண்டு இருந்தால் அதுவெல்லாம் நடக்காது. ஊர் சந்தைக்கு காய் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள் சொல்கின்ற விலை தான் கொடுக்கின்றோம். அவர்கள் இடத்தில் போய் எடுத்துக்கொண்டு வருகின்றோம். தக்காளி விலை முப்பது ரூபாய் சொல்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் அது சரியான விலைதான். ஆனால் இருபது கிலோ தான் தருவேன் என்று சொல்கிறார்கள். ஊர் சந்தைக்கு வரும் கூட்டத்திற்கு ஒருவருக்கு ஒரு தக்காளி என்றால் கூட பற்றாக்குறையாக தான் இருக்கும். 

நாம் நடத்தும் ஒரு சின்ன சந்தைகே இவ்வளவு பற்றாக்குறை. நமக்கு நிறைய தொடர்புகள் உள்ளன. கேட்டவுடன் வாங்கிக் கொடுப்பதற்கு நண்பர்கள் இருக்கின்றார்கள். பணம் இருக்கின்றது, வாங்குவதற்கு மக்கள் இருக்கின்றார்கள். அனைத்தும் இருந்தும் வாங்குவதற்கு காய்கறிகள் கிடைக்கவில்லை. ஊர் சந்தைக்கு வரும் அறநூறு எழுநூறு குடும்பங்களுக்கே காய் வாங்குவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது ஏழு கோடி மக்களுக்கு என்ன செய்வது?

சென்னையிலேயே வாய்ப்பு இருக்கின்றவர்கள் சொல்லுங்கள் மாடியிலேயே தோட்டம் போடுவோம். முதலில் வெளி ஊரிலிருந்து காய்கறிகள் வரக்கூடாது என்ற முடிவை எடுத்து கொள்ளவேண்டும். 

வாய்ப்புள்ளோர் ஊர் திரும்புங்கள். வாய்ப்பில்லாதோர் வீட்டுத் தோட்டங்கள் அமையுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால், ஏழை எளியோருக்கும் இயற்கை உணவுகள் கிடைக்கும். இல்லையெனில், இயற்கை உணவு என்பது பணக்காரர்களுக்கான சந்தையாக மட்டுமே இருக்கும். அவ்வாறான நிலைமை நாம் வாழும் காலத்தில் உருவானால், அது நாம் செய்யும் பெரும் பாவம் என நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் எல்லாவற்றையும் சம்மாகப் படைத்த இறைக்கு மன்சாட்சிப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனக்குள் இந்த அச்சமும் அக்கறையும் உள்ளது.

ஓரளவு செல்வம் உள்ளோர் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால், நம்மைச் சுற்றியுள்ள எளியோருக்கு நல்ல உணவு கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.

நாங்கள் 2012இல் உணவு திருவிழா ஓசூரில் நடத்தினோம். அது தான் தனியார் அமைப்பு நடத்திய முதல் பெரிய உணவுத் திருவிழா. அப்பொழுது விகடனில் அதை பற்றிய ஒரு பேட்டி வந்து இருந்தது. அப்பொழுது பூங்கார் இருபது ரூபாய், காட்டுயானம் வாங்குவதற்கு யாரும் இல்லை. அனால் இன்று பூங்கார் எழுபத்து ஐந்து ரூபாய். இதை எத்தனை மக்களால் வாங்க முடியும்? வாங்க முடியாது. எழுபத்து ஐந்து ரூபாய்க்கு விற்றாலும், இயற்கை விவசாயிக்குக் கட்டுப்படி ஆகுமா? அவர்களுக்கும் ஆகாது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட இயற்கை விவசாயிக்கு ஆதாயம் இல்லை. இதுதான் பொருளாதாரம்.

இவ்வளவு மோசமான நிலைமை உணவிற்கு. அரிசி நஞ்சு இல்லாமலும் இருக்க வேண்டும் அதிகமான விலையும் இருக்கக் கூடாது. இரண்டையும் சமப்படுத்த வேண்டும். 

ஜூலை மாத ஊர் சந்தையில் பொது உரிமை அங்காடி என்று ஒன்று அறிமுகம் செய்தோம். ஒரு கிலோ அரிசி அறுபத்தி ஐந்து ரூபாய் அடக்க விலை அப்போது இருந்தது. நான்குஇ ரூபாய் கூடுதலாக வைத்து, ஒரு கிலோ 72 ரூபாய்க்கு விற்றால், யாரால் அரிசி வாங்கி செல்ல முடியும்?
வாங்குபவர்களுக்கும் லாபம் இல்லை விற்பவர்களுக்கும் லாபம் இல்லை. இதை முதலில் மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு லாரி வாடகைக்கு எடுத்து ஐநூறு கிலோ அரிசி கொள்முதல் செய்து அதை ஐம்பத்தெட்டு ரூபாய் என்று விற்றோம். ஆனால் அதற்கு அடக்க விலை ஐம்பத்தைந்து ரூபாய் வந்தது. இப்படி வேலை செய்தே ஐம்பத்தி எட்டு ரூபாய்க்குத்தான் இயற்கை அரிசி கிடைக்கின்றது . சிப்பம் சிப்பமாக மக்கள் வாங்கி கொண்டு சென்றார்கள். ஒரு கிலோ வாங்கியவர்கள் இருபத்தி ஐந்து கிலோ வாங்கினார்கள். 

இதில் இரண்டு ரூபாய் தான் ஊர் சந்தைக்கு லாபம். செம்மைச் சமூக மக்களின் உழைப்பைக் கணக்கிட்டால், அதுவும் இருக்காது. இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. முடிந்தவர்கள் உற்பத்தியில் ஈடுப்பட வேண்டும். பகுதி நேரமாவது ஈடுப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் முதலில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும். அதிகமாக கூட இல்லை முதலில் ஒரு ஏக்கர் வாங்கினாலே போதும். அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊர் திரும்புதல் பற்றி பேசும்போதோ அல்லது வேளாண்மை பற்றி பேசும்போதோ நிறைய கேலிகளுக்கு உள்ளாகின்றோம். என்னையும் தனி பட்ட முறையில் நிறைய பேர் கேலிசெய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஊர் திரும்புங்கள் என நான் கூறுவது, இக்காலத்திற்கான சமூகப் போராட்டத்தின் வடிவம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமது நிலங்களை வைத்து அவர்கள் சூதாட்டம் நட்த்தும்போது, நாம் நம் நிலங்களுக்குத் திரும்புவதுதானே சரியான போராட்டமாக இருக்க முடியும்!
போராட்டம் என்பது வாழ்வியல் நடைமுறைகளில் இருக்க வேண்டும் என்ற கொள்கையைத்தான் நான் நம்புகிறேன். அதைத்தான் மக்களிடம் பரப்புகிறேன். அதைத்தான் நானும் செம்மைக் குடும்பத்தினரும் செயல்வடிவமாக மாற்றிக்கொண்டுள்ளோம்.

நாங்கள் வெறும் பிரசாரம் செய்வோர் இல்லை, செயல் வடிவம் கொடுக்கிறோம்.

‘எங்கள் தாகத்திற்குத் தண்ணீர் இல்லை, நல்ல உணவு இல்லை, காற்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கிழித்தீர்கள்?’ என என் சந்ததி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நிலைமை உருவாகக் கூடாது என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தின் கட்டளைக்கேற்ற செயல் வடிவங்களில் ஒன்றுதான் ‘ஊர் திரும்புங்கள்’ என்பது.

Published on : 04/11/2016