எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்!
-பெங்களூரு கலவரம் குறித்து....
ம.செந்தமிழன்
’எந்தச் சூழலிலும் எதிர்வினை ஆற்றாதீர்கள்; எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்’
என்று என்னுடன் பயணிப்பவர்களிடம் கூறுவதுண்டு. எதிர்வினை, மறுவினை ஆகிய
சொற்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாதவையாகிவிட்டதால், ‘Never react. Always
respond’ என்று ஆங்கிலத்தில் கூறினால் உங்களுக்கு இன்னும் எளிதாகப்
புரியும்.
திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டால் அல்லது மோசமான
குற்றச்சாட்டுகள் வீசப்பட்டால், உடனடியாக அவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவது
பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இந்தச் சூழல்களில் மறுவினை ஆற்றத்
துவங்கினால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். எதிர்வினை ஆற்றுவது தற்காலிகப்
பலன்களை வழங்கும், நிரந்தரத்தை முற்றிலும் ஒழித்துவிடும்.
ஏனெனில்,
அநீதிகளின் அடித்தளம் உணர்ச்சிகளால் மட்டுமே வலுப்படுத்தப்படுகிறது.
எல்லாவற்றையும் உணர்ச்சியின் பிடியில் ஒப்படைத்துவிடுவது அநீதிக்காரர்களின்
சிறந்த தந்திரம். அதே உணர்ச்சி வழியில் சென்று வெற்றியடைந்த ஒரே ஒரு
நேர்மையாளரைக்கூட இதுவரை உலகம் கண்டதில்லை, இனியும் காணப் போவதில்லை. இங்கே
தீயவர்கள் கால்கள் ஓயாமல் ஆடிக்கொண்டுள்ளன. நல்லவர்களின்
அடித்தளமோஎதிர்வினைகளில் சிக்கிக் கிடக்கிறது.
காவிரி நீர்
வழங்குதலை முன்வைத்து தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் எல்லா வன்முறைகளும்
அநீதிக்காரர்களின் பேயாட்டங்கள்தான். இப்போது நாம் எதிர்வினை ஆற்றுவதைக்
காட்டிலும் மறுவினை ஆற்றுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம்மவரை
அவர்கள் அடித்தால், திருப்பி அடிப்பதில் தவறேதும் இல்லை. அது எல்லா
உயிரினங்களுக்கும் உள்ள இயல்புணர்ச்சிதான். புழுகூட சீண்டுபவரைத் தலைதூக்கி
நோக்கும். பாம்புகள் தீண்டும், தேள் என்றால் கொட்டும், எறும்பெனில்
கடிக்கும், தேனீக்களோ கூட்டமாகக் கடித்து கொலையே செய்யும். ஆகையால்,
திருப்பித் தாக்குதல் தவறல்ல.
பாம்புகளும் எறும்புகளும் மனிதர்களின்
தாக்குதலுக்கு முன் வலுவிழக்கின்றன என்பதையும் இங்கே புரிந்துகொள்ளுங்கள்.
ஏனெனில், மனிதர்கள் அவ்வுயிரினங்கலின் இயல்புகளைப் புரிந்துகொண்டு
அவற்றுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். விளைவாக, அந்த
உயிரினங்களின் எண்ணிக்கை குறைகிறது அல்லது அவை இடமாற்றம் செய்துவிடுகின்றன.
காவிரி நீருக்காக நடக்கும் அட்டூழியங்கள் அல்ல, இப்போது நிகழ்பவை.
காவிரியின் பேரால் ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்படுகிறது. பெங்களூருவில்
குடியேறியுள்ள அயல் மொழியினரை, குறிப்பாகத் தமிழர்களை அப்புறப்படுத்தும்
நோக்கம்தான் இதில் முதன்மையானது.
தமிழக – கர்நாடக எல்லைப்
பகுதிகளில் உள்ள மற்ற ஊர்களில் இவ்வளவு வன்முறைகள் அரங்கேற்றப்படவில்லை.
குறிப்பாக, ஆசனூர் – சாம்ராஜ் நகர் மலைப் பகுதிகளிலும், மாதேஸ்வரன் மலை –
கொளத்தூர் வனச் சாலை கிராமங்களிலும் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
கன்னடர் எவர் தமிழர் எவர் என்று எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் இரு
இனத்தவரும் கலந்திருக்கின்றனர். அங்கெல்லாம் எவரும்
நிர்வாணப்படுத்தப்படவில்லை, வாகனங்கள் கொளுத்தப்படவில்லை. இவைபோன்ற எல்லைப்
பகுதிகள் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இரு இனத்தவரையும் தாங்கிக்கொண்டு
விரிந்துள்ளன.
பெங்களூருவில் மட்டும் ஏன் இவ்வளவு வன்முறைகள்
என்றால், தமிழர்களின் மீது கன்னடர்களுக்கு உருவாகியுள்ள ஆவேசம்,
பெங்களூருவை மையமாகக் கொண்டது. கர்நாடகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக
கன்னட இனவெறி, அரசியல் வடிவம் அடைந்துள்ளது. வாட்டாள் நாகராஜ் போன்ற சிலர்
இந்த இனவெறியைப் பொறுக்கித்தனமான அரசியலாக மாற்றி வைத்துள்ளனர். இந்தத்
தலைவர்களைக் கன்னட மக்கள் மதிக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
வாட்டாள் நாகராஜ் தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தவர்தான். அவரது
அமைப்பு மக்கள் செல்வாக்கு மிகுந்த அமைப்பல்ல, ஊடகச் செல்வாக்கும்
பெரும்புள்ளிகளின் கள்ளத் தொடர்பும் கொண்ட அடியாள் அமைப்பு அது.
’தங்களுக்குச் சொந்தமான காவிரியைத் தமிழர்கள் பறிக்கிறார்கள்’ என்ற
பொய்யைக் கன்னட இனவெறியர்கள் மிகவும் ஆழமாக அச்சமூகத்தில்
நிலைநிறுத்தியிருக்கிறார்கள். காவிரி என்பது இயற்கையாக ஓடும் நதி. அது
பல்லாயிரம் ஆண்டுகால நிலவமைப்பு வரலாற்றைக்கொண்டுள்ளது. அரசியல்
காரணங்களாலும், இன அடிப்படையிலும் தமிழகம் – கர்நாடகம் என்ற பகுப்பு உருவான
பின்னர், காவிரி எனும் இயற்கை அங்கத்தினால் தனது போக்கினை மாற்றிக்கொள்ள
முடியாது. நதி எப்போது நதிதான். அரசியல் எல்லைகள் மாறினாலும் மனிதர்களே
இல்லாமல் அனைவரும் செத்தொழிந்தாலும் நதி எப்போதும் நதிதான்.
தமிழர்களின் வரலாற்றில் காவிரிக்கு உள்ள உறவு, அன்னைக்கும்
பிள்ளைக்குமானது. இதே காவிரிதான் இப்போதைய கன்னடர்களுக்கும் அன்னை. இந்தக்
கன்னடர்கள் ஒருகாலத்தில் தமிழராக இருந்த இனத்தவர்தான். எருமையூர் என்று
சங்க இலக்கியங்கள் அழைக்கும் ஊர்தான் வடமொழியில் மகிஷவூர் என்றாகி, மைசூர்
என இப்போது வழங்கப்படுகிறது. குடகுதான் கூர்க் ஆகியது. தமிழின் ஒருகிளைதான்
கன்னடம் ஆகியது.
கர்நாடகத்தில் காவிரியைப் பற்றி பரப்பப்படும் செய்திகளில் உள்ள
அழுத்தமும் ஆவேசமும் தமிழகத்தில் இருப்பதில்லை. மனதைத் தொட்டுக் கூறுங்கள்,
உங்கள் குழந்தைகளில் எத்தனைப் பேருக்கு சிலப்பதிகாரத்தில் உள்ள காவிரி
விவரணை தெரியும். எத்தனைக் குழந்தைகளுக்குக் காவிரி உற்பத்தி ஆகும் இடம்
தெரியும்? காவிரியின் போக்கு, இயல்பு, பருவமழைக் காலம், காவிரிக் கரையில்
உள்ள ஊர்கள், விளைவிக்கப்படும் பயிர்கள், கடலில் அது கலக்கும் இடம் என
இப்போதைய குழந்தைகளுக்குத் தெரியாத நதிதான் காவிரி.
வாட்டாள்
நாகராஜ் அல்லது வேறு ஓர் இனவெறியர் ‘காவிரி எங்கள் தாய்’ என முழங்கினால்,
‘ஆம் அவள் எங்கள் தாய்தான்’ என முழங்க அங்கே இலட்சக் கணக்கான குரல்கள்
இருக்கின்றன. இங்கே காவிரியைப் பற்றிப் பேசப்படும் கூட்டங்களில் கூட்டம்
கூடுவதில்லை, பாடங்களில் காவிரியின் முழுமை இல்லை, தமிழர்களின் வாழ்வில்
இப்போது காவிரியே தேவையில்லை.
இப்போதைய தலைமுறைக்குக் காவிரி என்ற
பேர் மிகவும் அந்நியமானது. நான் மிகுந்த வேதனையுடன் கூற விரும்பும் சேதி,
‘கன்னடர்கள் மட்டும் அடிக்காமல் இருந்தால் இங்குள்ள தமிழர்களுக்கு இன்னும்
சில ஆண்டுகளில் காவிரி எனும் பெயரே மறந்துபோகும்’ என்பதுதான்.
நாம்
நமது வரலாற்றைப் படிப்பதில்லை, நமது மொழியைக் கற்பதில்லை, நமக்கான இயற்கை
வளங்களைப் பாதுகாப்பதில்லை. வரலாற்றை நிராகரிக்கும் எவரும் கோழைத்தனமாக
அழிய வேண்டி இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஈழப் போரில்
மக்கள் அழிந்துகொண்டிருந்தபோது, பல்லாயிரம் பேரோடு நானும் ஊர் ஊராகச்
சென்று போருக்கு எதிராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் சந்தித்த
மக்களில் பெரும்பாலானோர், ‘இங்கிருந்து பிழைக்கப்போனவர்களுக்கு இலங்கையில்
எதற்குத் தனிநாடு?’ எனக் கேட்டனர். ஈழம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக
நீடித்திருக்கும் தமிழர் நாடு என்ற வரலாறு கூட இங்கே மக்களிடம்
பரப்பப்படவில்லை என்பதை அறிந்துகொண்டபோது, அங்கே எல்லாம்
முடிந்துபோயிருந்தது.
காவிரியைப் பற்றிய வரலாறு, இயற்கையியல்
மற்றும் அரசியல் நமது தலைமுறைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். காவிரியை நமது
அன்னையாகப் பார்க்கும் மனம் நமக்கு வேண்டும். நம் பிள்ளைகள் காவிரியையும்
இன்னபிற நதிகளையும் வணங்க வேண்டும்.
இயற்கையின் கொடைகளை வணங்கி
வரவேற்பதுதான் காலம் காலமாக மனித சமூகத்தில் இருந்துவரும் மரபு.
தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ள போலித்தனமான பகுத்தறிவுச் சிந்தனை நதியை
வெறும் ‘விவசாய ஆதாரமாக’ப் பார்க்கக் கற்றுத் தந்துள்ளது.
’காவிரி
நீர் இல்லாவிட்டால், காவிரி டெல்டாவில் வேளாண் உற்பத்தி இருக்காது’ என்று
வாசிக்கப்படும் செய்தியைக்கேட்டு வெறுத்துப் போனவன் நான்.
’இன்றைக்கு அம்மா வராவிட்டால், வீட்டில் இரவு சாப்பாடு கிடைக்காது. அப்பா
வராவிட்டால், செலவுக்குப் பணம் இருக்காது, மனைவி வராவிட்டால் துணிகளைத்
துவைக்க முடியாது’ என்று சிந்திப்பது எவ்வளவு இழிவானதோ அதைப் போலத்தான்,
‘காவிரி நீர் வராவிட்டால் டெல்டா விவசாயம் நடக்காது’ என்பதும்.
‘காவிரியின் ஓட்டம் தடைபட்டால் எங்கள் நிலத்தில் இரத்த ஓட்டம் நின்றதுபோல்
நாங்கள் வருந்துவோம்’ என்ற சிந்தனைதான் இயற்கையின் பிள்ளைகளின் மனதில்
இருக்க வேண்டியது. இந்தச் சிந்தனை இல்லாத காரணத்தினால்தான், அன்னை
காவிரியில் நிகழும் மணல் கொள்ளையை அனுமதிக்கிறோம், அவள் மீது நச்சுக்
கழிவுகள் கலப்பதை அனுமதிக்கிறோம்.
காவிரியை நமது நிலத்தின் இரத்த
நாளமாகப் பார்க்கும்வரை, எந்த அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை.
ஏனெனில், கன்னடர்கள் காவிரையைத் தங்கள் தெய்வமாகத்தான் கருதுகிறார்கள்.
நேர்மையற்ற அரசியலில் காவிரி அன்னை சிக்கியிருக்கிறாள். கர்நாடக அரசியலில்
காவிரி, தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான எளிய கருவி. தமிழக
அரசியலில் காவிரி என்பது வெறும் விவசாயிகளின் பிரச்சினை. அதிலும் ’டெல்டா
விவசாயிகளின்’ பிரச்சினை. இவை இரண்டும் சுயநலம் மிக்க சூதுகள்.
இப்போது அவர்கள் நம்மை அடிக்கிறார்கள். அவர்களை நம்மாலும் அடிக்க முடியும்.
ஆனால், இவை இரண்டும் தீர்வுகளை நோக்கி நகர்த்தப் போவதில்லை. ஏனெனில், இவை
இரண்டுமே அடிப்படைச் சிக்கலுக்கான ‘எதிர்வினைகள்’தானே தவிர, ‘மறுவினைகள்’
அல்ல.
காவிரி அன்னையை மனதளவில் வணங்குங்கள். காவிரிக்காக இதுவரை
நிகழ்ந்துள்ள போராட்டங்கள், செயல்பாடுகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கவனத்திற்கு வராமல், காவிரியின் உரிமைகளுக்காகப் போராடி மடிந்தோர்
எண்ணற்றோர். இப்போதும் காவிரிக்காக குடும்பத்தை நிராகரித்து விட்டு வீதி
வீதியாக அலைவோர் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் அறிந்துகொள்ளுங்கள்.
காவிரி மட்டுமல்ல, நமது அனைத்து இயற்கை வளங்களும் பறிக்கப்படுகின்றன
என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இயற்கை வளங்களின் மீது தெய்வ பக்தி
இல்லாமல் போனால் அவற்றைப் பறிகொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்.
காவிரி நதியைப் பாதுகாக்கும் திறன் இல்லாத
வெற்றுக் கூச்சல் கூட்டமாக ஒட்டுமொத்தத் தமிழரும் மாற்றப்பட்டுள்ளனர்
என்பது வெட்கக்கேடான உண்மைதான். ஆனால், இந்த நிலை மாறும். நம்மால் இந்த
நிலையிலிருந்து மீண்டெழ இயலும்.
சொந்த மொழியின் மீதும், நிலத்தின் மீதும் ஆழ்ந்த அன்புகொண்ட எவரையும் படைத்தவர் பாதுகாக்கிறார்.
நாம் நமது மொழியை, இயற்கை வளங்களை, வரலாற்றை நேசிப்போம். காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டதுதான் அன்பு.
ஒரு நதியை நேசிப்பதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. மலையை, மரத்தை,
பசுவை, காளையை, பன்றியை நேசிப்பதற்குக் காரணம் தேவையில்லை. எந்தச் சூழலில்
படைக்கப்பட்டோமோ அந்தச் சுழலில் உள்ள அனைத்தும் நம் அங்கங்கள்தான்.
அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்குண்டு. இது அரசியல் அல்ல, அறவியல்.
எதிர்வினை ஆற்றுவது மிக எளிதானது. ’அவர் திட்டினால், நீயும் வசைபாடு, அவர்
அடித்தால் நீயும் அடி, அவர் துப்பினால் நீயும் துப்பு’ என்பதுதான்
எதிர்வினையின் மந்திரம். அரசியல்வாதிகள், திரைப்பட வணிகர்கள்,
மணல்கொள்ளையர் மற்றும் வேறுபல துறையினருக்கும் இதுதான் வசதியான மந்திரம்.
இந்த மந்திரத்தை ஓதித்தான் அவர்கள் காவிரியை நம்மிடமிருந்து பிரித்தார்கள்.
காவிரியில் நீர் பெருகினால், மணல் கொள்ளை நிகழாது என்பதற்காக நீர்
வரத்துக்கு எதிராகச் சிந்தித்துச் செயல்படுவோர் தமிழகத்தில்
இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள்தான் பெரும்பாலான தலைவர்களுக்கு ’ஊட்டச்
சத்து’ ஊட்டுகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
நிரந்தரமாக
இந்த சிக்கல் தீர்வதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற
பெரும்புள்ளிகளுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. ஈரோடு, கரூர் பகுதியில்
உள்ள பல தொழிற்சாலைகளுக்குக் காவிரி நீரோட்டம் மிகப் பெரிய தொல்லை. இன்னும்
ஏராளமான பேராசை வெறியர்கள் தமிழகத்தில் காவிரிக்கு எதிராகச் சிந்தித்துச்
செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
காவிரியின் மீதான அன்பும் அக்கறையும் எளிய மனிதர்களான நமக்கு வேண்டும்.
இந்தப் புரிதல்களுடன் நாம் மறுவினையாற்றத் துவங்குவோம். சில முன்னெடுப்புச் செயல்பாடுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. சங்ககாலத்திலிருந்து இன்றுவரையிலான காவிரி வரலாற்றை அறிந்துகொள்ளுங்கள்.
2. காவிரி நதிக்காகப் போராடியோரைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தகவல்களை
எல்லாம் செம்மை சமூகத்தின் வழியாக உங்களிடம் சேர்ப்பிப்பது என் கடமை.
3. காவிரி நதியின் மீது தமிழகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைத்
தெரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுங்கள் எழுதுங்கள்.
4. காவிரி உற்பத்தியாகும் குடகுமலைக்குச் சென்று பார்ப்பதைக் கடமையாகக்
கொள்ளுங்கள். காவிரி ஓட்டத்தின் பாதை நெடுகிலும் பயணம் செய்யுங்கள்.
5. குழந்தைகளுக்கு காவிரியை முறையாக, முழுமையாக அறிமுகம் செய்யுங்கள்.
6. ’காவிரி நதி என் அன்னை’ என்ற முழக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலதிலும் பதித்துப் பரப்புங்கள்.
7. பெங்களூருவில் பணியாற்றும் தமிழர்கள், அந்த ஊரைச் சீரழிக்காத வகையில்
நடந்துகொள்ளுங்கள். குறிப்பாக, உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளைப்
பறிக்காமல் வாழுங்கள்.
உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக அயலவர் மீது தாக்குதல்
நடத்தும் வழக்கம் புவியெங்கும் வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது.
இப்பணிகளை நாம் செய்யத் துவங்கினால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து, ‘காவிரி
நதியின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட’ பெரும் கூட்டம் தமிழகத்தில்
இருக்கும். அப்போது காவிரி அன்னையை எவரும் தடுக்கத் துணிய மாட்டார்கள். மிக
முக்கியமாக, ‘காவிரியைப் பாதுகாத்துக்கொடுங்கள்’ என எந்தத் தலைவரிடமும்
நமது சமூகம் நின்றுகொண்டிருக்காது. ஏனெனில், மக்கள்தான் தலைமையை
உருவாக்குகிறார்கள். சமூகம் விழிப்படைந்தால், தலைமைகள் மாறிவிடும்.
அவ்வப்போது நிகழும் சிக்கல்களுக்கு எதிர்வினையாற்றிவிட்டு, அடுத்த
சிக்கலுக்குத் தாவிக்கொண்டிருப்பது இப்போதைய சமூகத்தின் கேடுகெட்ட வழக்கம்.
எதிர்வினைகளை எல்லாம் வரம்புக்குள் வைக்க வேண்டும்.
காவிரி மட்டுமல்ல நமது அனைத்து மரபு உரிமைகளையும் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது, ‘மறுவினையாற்றுதல்’தான்.
இணைப்புப் படம்:
Paul Gregory